பிரஜாசக்தி சபை பிரதிநிதிகளுக்கு போசனை தொடர்பான பன்முகத்துறை அணுகுமுறைகள் குறித்து பயிற்சி - 14.07.2026
போசனைக்கான பன்முகத்துறைசார் செயற்பாட்டுத் திட்டத்தின் அணுகுமுறைகளை பிரஜாசக்தி சபைகளின் பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்தும் பயிற்சித் திட்டம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதேசத்தின் கிராம மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள ஒவ்வொரு பிரஜாசக்தி சபையிலிருந்தும் தலா மூன்று பிரதிநிதிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், போசனை மேம்பாட்டுக்கான பன்முகத்துறை அணுகுமுறைகள், சமூக மட்ட செயற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தின் விடய உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சியை நடத்தினர்.
இந்நிகழ்வின் மூலம் சமூக மட்டத்தில் போசனை தொடர்பான விழிப்புணர்வையும் ஒருங்கிணைந்த பன்முகத்துறைசார் செயற்பாடுகளையும் வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வார - மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு | 18 ஜூலை 2026
"வியத்தகு சிறுவர் உலகத்திற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம்" என்ற தொனிப்பொருளில் ஜூலை 14–20 வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு 18 ஜூலை 2026 அன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ். சுதர்சினி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ. தாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், முன்பிள்ளைப்பருவ மாவட்ட இணைப்பாளர் ஏ. முரளிதரன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் முன்பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை — புனாணை கிழக்கு | 02 ஜூலை 2026
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புனாணை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் ரிதிதென்ன, ஜெயந்தியாய பொதுமக்களுக்கான நடமாடும் சேவை 02 ஜூலை 2026 காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை புனாணை கிழக்கு மட்/மம இக்ராஹ் வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பிரதேச சமூக மட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் நிர்வாகம், பதிவாளர், சமூக சேவை, சமுர்த்தி, முதியோர் / மாற்றுத்திறனாளி, விவசாயம், காணி, கலாசாரம், ஆயுர்வேதம், மீன்பிடி, நடமாடும் மருத்துவம், பொதுச்சுகாதாரம், கால்நடை வைத்தியம், தென்னை அபிவிருத்தி, மகாவலி அபிவிருத்தி உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட அரச திணைக்கள சேவைகள் வழங்கப்பட்டன.
300 பொதுமக்கள் வருகை தந்து சேவைகளைப் பெற்றனர். விசேடமாக 250 மாணவர்களும் FPA மருத்துவ முகாமில் பயன்பெற்றனர். க.பொ.த. சாதாரண / உயர் தர சிறந்த மாணவர்களுக்கு பரிசில்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள், இரண்டு முன்பள்ளிகளின் மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டன. பதவிநிலை உதவியாளர் ஏ.எஸ். ஜெமீல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்களிப்பு வழங்கிய அனைத்து அமைப்புகளுக்கும் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.


















