சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது — பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் கௌரவிப்பு | 24 ஜூன் 2026
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதைப் பெற்ற வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திரு. எம்.பீ.எம். முபாறக் அவர்கள் 24 ஜூன் 2026 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக கௌரவிக்கப்பட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையிலும், கிழக்கு மாகாண சமூக பாதுகாப்புச் சபையின் சிரேஸ்ட இணைப்பாளர் எஸ்.ரீ. சுதாகரன் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ். சசிகரன், மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக கணக்காளர்கள் கலந்துகொண்டனர்.
திரு. முபாறக் அவர்கள் 2024 ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்து, மக்களுக்கான சேவைகளை திறம்பட வழங்கியமைக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் பணியாற்றும் அவர்களுக்கு இவ்விருது கிடைத்தமை, அவரது அர்ப்பணிப்புமிக்க பொது சேவைக்கான மேலும் ஒரு சிறப்பான தேசிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.













